Friday, May 27, 2011

பேரவையின் கவுரவம் மேலும் உயரும் வகையில் செயல்படுங்கள்: ஜவாஹிருல்லாஹ்!

தமிழக சட்டப்பேரவையின் கம்பீரமும் கவுரவமும் மேலும் உயரும் வகையில் சபாநாயகர் செயல்படுவார் என நம்புவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்து சட்டப்பேரவையில் பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள இந்த சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களாக அமர்வதற்கும், நீங்கள் இந்த 14வது சட்டப்பேரவையின் தலைவராக 1922ம் ஆண்டு வெலிங்டன் பிரபுவும் அவருடைய துணைவியாரும் இந்த அவைக்கு பரிசாக அளித்த சிறப்புமிக்க சிம்மாசனத்தில் அமருவதற்கும் வழிவகுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மீது மிகுந்த கரிசனம் கொண்ட அரசு என்பதை அதன் தொடக்கமே பறை சாற்றிக் கொண்டிருக்கின்றது.

தற்காலிக பேரவைத் தலைவராக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் செ.கு. தமிழரசனை நியமித்ததோடு, இப்போது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உங்களை இந்த பேரவையின் தலைவராகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பி. தனபாலை பேரவைத் துணைத் தலைவராகவும் நியமித்ததன் மூலம் சமூக நீதியை முதல்வர் நிலைநாட்டியுள்ளார். இதற்காக அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் தலைமையின் கீழ் எனது சட்டமன்றப் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முறுவல் நிறைந்த முகத்திற்கு சொந்தக்காரான நீங்கள், உங்கள் மலர்ந்த முகத்தினால் இந்த அவையில் எந்நேரமும் தென்றல் வீசுவதற்கு வழி வகுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. உங்கள் அனுபவம், பொறுமை, நேர்மையினால் இந்தப் பேரவையின் கம்பீரமும் கவுரவமும் மேலும் உயரும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் இருவர் பணியும் சிறக்க இறைவனைப் பிரார்த்தித்து உங்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜவாஹிருல்லா உரையாற்றினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza