சான்யா:பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற, "பிரிக்' நாடுகள் தங்களுக்குள் நடக்கும் வர்த்தக சம்பந்தமான பரிவர்த்தனைகளில், ஐந்து நாடுகளின் கரன்சியைப் பயன்படுத்தும் முக்கிய உடன்பாடு ஏற்பட்டது.
சீனாவின் சான்யா நகரில் பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார்.ஐ.நா., பாதுகாப்பு சபையில் ரஷ்யாவும், சீனாவும் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், இந்தியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நாடுகள் எதிர்க்கொண்டுள்ள பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமென, இந்த மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது. சர்வதேச பயங்கரவாதம், கடல் கொள்ளை, சைபர் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் கோரப்பட்டது.
லிபியாவில் நடக்கும் தாக்குதலுக்கு இந்த மாநாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லிபியா விஷயத்தில் அனைத்து தரப்பினரும் பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் ஐ.நா., முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மற்ற நாடுகளின் எல்லைப்புற கவுரவத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.மேலும் மிக முக்கியமாக இந்த ஐந்து நாடுகளிடையே நடக்கும் பொருளாதாரப் பரிவர்த்தனைகளில், நிதி சம்பந்தப்பட்ட சர்வீஸ்களில், காபிடல் மார்க்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்கள் நாட்டு கரன்சியைப் பயன்படுத்த அனுமதிக்கும் நடைமுறைகளை உருவாக்க உடன்பாடு ஏற்பட்டது.
இதற்காக சம்பந்தப்பட்ட வங்கித் துறை பிரதிநிதிகள் முதற்கட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.இந்த நாடுகளிடம் அதிக வளங்கள், மனித சக்தி திறன் இருப்பதால், அமெரிக்க டாலர் அல்லது மற்ற கரன்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் பரஸ்பரம் அந்தந்த நாட்டு கரன்சியை வர்த்தகப் புழக்கத்தில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை, ஐந்து நாட்டுத் தலைவர்களும் கொள்கையளவில் ஏற்று அறிவித்தனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment