Wednesday, February 16, 2011

நிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யப் போவதாகவும், அவர்களை பொய்வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிச்சயமாக, இந்த அறிவிப்பு நூற்றுக்கணக்கான உதவியற்ற அப்பாவிகளான விசாரணை கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல தொடர்ச்சியாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களால் நிராசையடைந்துள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தரும் செய்தியாகும்.

மலேகான் ஒன்று, மலேகான் இரண்டு, ஜெய்ப்பூர், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட சாதாரண மக்களை கொலைச் செய்யும் வெறித்தனமான எண்ணத்துடன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசியசெயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரும் அவருடைய ஆதரவு கும்பலுமாகும் என இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், குண்டுவெடிப்புகள் என்றாலே அதனை நிகழ்த்துவது முஸ்லிம்கள்தாம் என்ற இந்தியாவின் அதிகார வர்க்கம் வகுத்து வைத்திருக்கும் பொதுவிதியின் அடிப்படையில் போலீஸ் துறையைச் சார்ந்த பாசிச சிந்தனைக் கொண்ட அதிகாரிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சித்திரவதைச் செய்து சிறையிலடைத்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேதான் மலேகான்-2 குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். அப்பொழுதெல்லாம் உயர்ஜாதி ஆதிக்க ஊடகங்களும், உள்துறை அமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகளும், போலீஸ் துறையில் ஒரு பிரிவினரும் விசாரணையை திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

ஒருபோதும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளில் குற்றங்களை சுமத்தி சிறையிலடைக்கப்பட்டனர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்.

புலனாய்வு ஏஜன்சிகளில் ஆழமாக படிந்துபோன பாரபட்சம் மட்டுமல்ல, அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தொடுவதற்கு அஞ்சிய அரசியல் தலைமைகளும் பயங்கரமான இந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாவார்கள்.

பலரும் மூடிமறைக்க திட்டமிட்ட உண்மைகள் வெடித்துச் சிதறியபோது நிரபராதிகளை விடுதலைச் செய்யவும், பொய்வழக்கு சுமத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் தயாரானது.

போலி என்கவுண்டரை நடத்துவதில் வல்லுநர்களான டெல்லி போலீசில் ஸ்பெஷல் பிரிவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் உதவியுடன் போலீசாருக்கு பயிற்சியளித்த மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், இந்தியாவின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரணைச்செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும் நடத்திய சட்டத்திற்கு புறம்பான அத்துமீறல்களைக் குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு தயாராக வேண்டும்.

அதுமட்டும் போதாது, பல ஆண்டுகளாக வெளியுலகை காணாமல் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கும் மத்திய அரசு தயக்கம் காட்டக்கூடாது. இதுதான் முன்னேறிய சமூகத்தின் அடையாளமாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza