Monday, January 24, 2011

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு

புதுடெல்லி,ஜன.24:இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்ட சூழலில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின் குற்றங்களுக்கு பலிகடாவாகி பல்வேறு கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு நிரபராதிகளாக நிரூபிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் தேவையான அனைத்து சட்டரீதியான, பொருளாதரீதியிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற சமுதாய அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய மலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளில் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோருக்கு இதுவரை ஜாமீன் கூட கிடைக்கவில்லை. 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைமையில் சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் போன்ற பயங்கரவாத அமைப்புகள் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(சிமி), ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி போன்ற தடைச் செய்யப்பட்ட இயக்கங்கள் மீது குற்றம் சும்த்தப்பட்டன. பின்னர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது ஹிந்துத்துவா அமைப்புகள்தான் என்பது ஹேமந்த் கர்காரே நடத்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும், தற்போது ராஜஸ்தான் ஏ.டி.எஸ், சி.பி.ஐ, என்.ஐ.ஏ போன்ற புலனாய்வு ஏஜன்சிகள் நடத்திய விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்நிலையில் பொய்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சி.பி.எம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கூடுதலான குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza