Sunday, December 5, 2010

அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஃபலஸ்தீன் அரசை கலைப்போம் - மஹ்மூத் அப்பாஸ்

ரமல்லா,டிச.5:இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் ஃபலஸ்தீன் அதாரிட்டியை கலைக்கப் போவதாக ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்ந்து வருமானால், மேலும் அமெரிக்கா தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியை சந்திக்குமானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஃபலஸ்தீன் சுயாட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம் என அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேற்குகரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இல்லாத அதாரிட்டியின் அதிபராக தொடர்வதை என்னால் அங்கீகரிக்க இயலாது. ஃபலஸ்தீன் நாட்டை உலகம் அங்கீகரிக்கவில்லையெனில் அதாரிட்டியை கலைத்து விடுவதை தவிர வேறுவழியில்லை. இவ்வாறு அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த ஃபலஸ்தீன்-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தை இரண்டு மாதம் முன்பு அமெரிக்காவின் ஆதரவுடன் துவங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து வாபஸ் பெறப்போவதாக அப்பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், குடியேற்ற நிர்மாணங்களுக்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza