Tuesday, November 6, 2012

“எங்கள் உளவுத்துறை ஆட்களை, உளவு பார்க்க அயல் நாடுகளுக்கு அனுப்புவதில்லை!”- ஈரான்


அலி அக்பர் சலீஹி
“ஈரானிய உளவுத்துறை குவைத், மற்றும் சில அரபு நாடுகளை உளவு பார்க்கிறது” என்ற குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.  “எமது அயல் நாடுகளில் உளவு நெட்வெர்க் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அவசியம் ஏதும் எமக்கில்லை” என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலீஹி இன்று தெரிவித்துள்ளார்.

குவைத், மற்றும் சில அரபு நாடுகளை ஈரானிய உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற செய்தி, நேற்று குவைத்தின் அல்-ராய் பத்திரிகையில் முதலில் வெளியானது. அதையடுத்து, கத்தாரின் அல்-வட்டான், அதே செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு, சுடச்சுட மறுப்பு தெரிவித்துள்ளது ஈரானிய வெளியுறவு அமைச்சு.


குறிப்பிட்ட செய்தி வெளியான கத்தாரில் இருந்து வெளியாகும் அல்-வட்டான் பத்திரிகைக்கே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலீஹி, பேட்டியளித்து, தமது மறுப்பை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் சிரியா ராணுவத்துக்கு உதவியாக ஈரானிய சினைப்பர் (தொலைவில் இருந்து குறிபார்த்து சுட்டு வீழ்த்தும்) அணி ஒன்று, போராளிப் படையினரை கொன்று குவித்து வருவதாக உள்ள வதந்தியையும் மறுத்தார்.

“இந்த வதந்தியை உங்களாலேயே நம்ப முடிகிறதா? சிரியா நாட்டு ராணுவத்தில் சுமார் அரை மில்லியன் வீரர்கள் உள்ளார்கள். அவர்கள், சிறிய குழு ஈரானிய சினைப்பர் குழுவை அழைத்து வைத்துக்கொண்டுதான் யுத்தம் புரிகிறார்கள் என்று சொல்வது அபத்தமாக இல்லையா?” என்று கேட்டிருக்கிறார், ஈரானிய வெளியுறவு அமைச்சர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza