Monday, February 20, 2012

கையூட்டுச் செய்தி:167 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்!

paid news
புதுடெல்லி:ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் தங்களின் செய்திகளை வெளியிட லஞ்சம் வழங்கிய 167 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகமான வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த பஞ்சாபில் 129 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 38 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணிப்பூரிலும், உத்தரகாண்டிலும் வேட்பாளர்கள் மீது இதுவரை புகார் கிடைக்கவில்லை. உள்ளூர் மொழி பத்திரிகைகள் மீதுதான் பெரும்பாலான புகார்கள் வந்துள்ளன.

ஆனால், இப்புகார்களில் ஒன்றில் கூட இதுவரை விசாரணை பூர்த்தியாகவில்லை என்றும், வேட்பாளர்களின் பதில் கிடைக்க வேண்டியுள்ளது என்றும் டெல்லியில் தேர்தல் கமிஷன் அதிகாரி கூறினார். கிடைத்த புகார்களை அந்தந்த மாநிலங்களின் முக்கிய தேர்தல் கமிஷனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரி கூறினார்.

தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு அஞ்சி கையூட்டு செய்திகள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர். கையூட்டுச் செய்தி(பெய்ட் நியூஸ்) புகாரின் மீதான விசாரணையில் குற்றவாளி என கண்டறிந்த உ.பி மாநிலத்தில் பிஸவ்லி எம்.எல்.ஏ உம்லேஷ் யாதவின் பதவி 2011 ஆம் ஆண்டு தகுதியிழப்பு செய்யப்பட்டது. 2007-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனக்கு ஆதரவான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு உம்லேஷ் யாதவ் பெருந்தொகையை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், தற்போது நூதன வழிகள் மூலம் தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிட லஞ்சம் கொடுத்து தேர்தல் கமிஷனை ஏமாற்றி வருகின்றனர் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கையூட்டுச் செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து 147 புகார்களும், மேற்குவங்காளத்தில் இருந்து 23 புகார்களும், கேரளாவில் இருந்து 49 புகார்களும் தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza