Tuesday, January 24, 2012

ஆதர் அடையாள அட்டை இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பிஜேபி

aadhar card
புதுடெல்லி:இந்தியாவில் தற்போது வழங்கப்பட்டு வரும் ஆதர் அடையாள அட்டை இந்திய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்று பிஜேபி தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடிமகன் என்ற அந்தஸ்த்து கொடுக்கப்படும் என்றும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என்று பிஜேபி கூறியுள்ளது.

மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பலர் புலம் பெயர்ந்து இந்தியாவில் குடியேறி உள்ளதாகவும் அவர்கள் இந்திய நாட்டின் பிரஜைகள் இல்லை என்றும் இவர்களால் தீவிரவாதம் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது என்று பிஜேபியின் செய்தி தொடர்பாளர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதர் அடையாள அட்டை என்பது அனைத்து குடியேற்றக் காரர்களுக்கு கொடுக்கப்படுவது என்றும் இது நாட்டின் குடிமகன்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு என்பது நாட்டின் முன்னேற்றத்திலிருந்து வேறுபட்டது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் மற்ற நாடுகளிலுருந்து அதிகமாக குடியேறி உள்ளனர் என்றும் ஏற்கனவே இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஆதர் அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டுவிட்டால் இவர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்று உரிமை கொண்டாடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் இந்த நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்பதே நிதர்சனம். ஆனால் பிஜேபியின் இந்த கூற்று உள்நோக்கத்தை கொண்டது போன்று உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இதுவரை 12 கோடி பேருக்கு இந்த ஆதர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza