Monday, November 21, 2011

இனி நான்கு தினங்கள்: சமூக நீதி மாநாட்டிற்கு வரலாற்று சிறப்பு மிக்க தலைநகரம் தயாராகிறது

sjc
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு இனி நான்கு தினங்களே மீதமுள்ள நிலையில், மாநாட்டை வரவேற்க வரலாற்று சிறப்பு மிக்க இந்திய தலைநகரமான புதுடெல்லி தயாராகி வருகிறது.

வருகிற 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாநாடு நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை துவக்கி வைப்பார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும். 27-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவுறும். கருத்தரங்குகளிலும், பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

25-ஆம் தேதி மாநாட்டு தொடர்பான கண்காட்சியை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா துவக்கி வைப்பார்.

மாநாட்டையொட்டி தென்னிந்தியாவை சார்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் பிரதிநிதிகள் டெல்லிக்கு வரத் துவங்கியுள்ளனர். பல்வேறு மாநிலத்தை சார்ந்த பிரதிநிதிகள் ராம்லீலா மைதானத்திலேயே தங்குகின்றனர். இதுத்தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் அம்பேத்கர் பவன் உள்ளிட்ட இடங்களிலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மாநாட்டு அமைப்புக்குழு கூடி மீளாய்வு செய்தது. ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்துதான் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். பல வாரங்களாக மாநாட்டிற்கான பணிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய பல மாநிலங்களிலிருந்தும் பாப்புலர் ஃப்ரண்டின் சேவை தொண்டர்கள் பல நாட்களுக்கு முன்பே டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

மாநாட்டு பிரச்சாரம் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக நீதியைக் குறித்த விழிப்புணர்வுடைய ஒவ்வொரு டெல்லி வாழ் இந்தியரும் இம்மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்ற அடிப்படையில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. டெல்லியின் வீதிகளில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களும், தொண்டர்களும் களமிறங்கி ஒவ்வொருவரையும் நேரடியாக சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கின்றனர்.

டெல்லியின் ஒவ்வொரு பகுதியிலும் தெருமுனைக்கூட்டங்கள், நோட்டீஸ் விநியோகம், வீடு வீடாக சென்று பிரச்சாரம் ஆகியன நடந்துவருகின்றன. பழைய டெல்லியின் மார்க்கெட்டுகள், டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றை மையமாக கொண்டும் பிரச்சாரம் நடந்துவருகிறது.பழைய டெல்லி உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்களும், கொடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மக்களிடமிருந்து மாநாட்டிற்கு மிகச்சிறந்த ஆதரவு கிடைத்து வருவதாக மாநாட்டு அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ மஸ்ஜிதில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza