Monday, September 26, 2011

கோபல்கர் கலவரம் – ராஜஸ்தான் உள்துறை அமைச்சரின் பதவிக்கு ஆபத்து

imagesCAKA2I01
புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்நகர் மாவட்டத்தில் உள்ள கோபல்கர் பகுதியில் நடந்த மதக் கலவரத்தில் போலீஸாரின் அத்துமீறல் மற்றும் கலவரத்தை தடுப்பதில் மாநிலத்தின் தோல்வி ஆகியவை குறித்து காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு அளித்துள்ள அறிக்கையின் விளைவாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ஈத்கா பள்ளியின் இடப் பிரச்னை தொடர்பாக குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் 9 முஸ்லிம்கள் இறந்துள்ளனர் மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கோபல்கரின் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மூன்று கலவரங்கள் நடைபெற்றுள்ளதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் மேலிடம் அதிர்ப்தியில் உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் சிறுபான்மை சமூகத்தின் கோபத்தை தணிப்பதற்காக கலவரக் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக முதல்வர் அசோக்கிற்கு செய்தி அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தரிவால் கலவரத்தை தடுப்பதில் தோல்வியை சந்தித்துள்ளதால் பதவி விலகலாம் எனத் தெரிவதாக காங்கிரசின் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் முஸ்லிம்களின் மியோ மகாசபா, சாந்தி தரிவால் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் மேலிடம் முஸ்லிம்களை திருப்தி படுத்துவதற்காக அக்கோரிக்கையை ஏற்றுகொள்ளும் எனவும் தெரிகிறது.


கடந்த திங்களன்று கலவரம் நடந்த பகுதிக்கு ரஷித் அல்வி, விஜய் பஹுகுணா,விப்லோவ் தாகூர் மற்றும் தீபேந்தர் ஹூட ஆகியோரைக் கொண்ட எம்.பிக்கள் குழு பார்வையிட்டது. அக்குழு கடந்த செவ்வாய்யன்று சோனியா காந்தியிடம் தங்களுடைய அறிக்கையை சமர்பித்தது. ராஜஸ்தான் முதல்வர் கெலாட் நேரில் சென்று டெல்லி தலைமையிடத்தில் விளக்கம் அளித்த போதும் காங்கிரஸ் மேலிடம் திருப்திக் கொள்ளவில்லை. மேலும் அது கலவரத்தைப் பற்றி விசாரிக்க சிபிஐ நியமித்துள்ளது மேலும் நீதி விசாரனைக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்படத்தக்கது. மேலும் கலவரத்தால் பாதிகப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடும் அவர்களின் புனர் வாழ்விற்கு தேவையான உதவிகளையும் செய்துவருகிறது.

மேலும் காங்கிரசின் உண்மையை கண்டறியும் குழு கெலாட் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மஸ்ஜிதில் தோட்டாக்களின் அடையாளம் இருப்பதாலும் எரிக்கப்பட்ட உடல்கள் பள்ளியின் கிணற்றின் உள்ளிருந்து எடுக்கப்பட்டதாலும் மஸ்ஜிதின் சுவர்களிலும் தரையிலும் ரத்தக் கறைகள் படிந்திருப்பதால் போலீஸின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் சந்திரபன், நிர்வாக குறைப்பாட்டால் நிலைமை கையை மீறி போயுள்ளதாகவும் அதற்கு கெலாட் அரசுதான் காரணம் என்று சாடியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது போலிஸ் மற்றும் நிர்வாகத் துறை ஆகியவற்றின் மெத்தனமாக இருந்திருக்கா விட்டால் கோபல்கரில் கலவரம் தடுக்கப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே முதலமைச்சர் அஷோக் கெலாட் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். செப்டம்பர் 15-ம் தேதி ஆரம்பித்த கலவரத்திலிருந்து இதுவரைக்கும் ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்று போலீஸ் தெரிவித்துள்ளனர்.

ஒலிப்பெருக்கி மூலம் ஆத்திரமூட்டும் வகையில் பேசிய இமாம் தான் இக்கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று சனிக்கிழமை அன்று இன்ஸ்பெக்ட்ர் சுனில் தத் தெரிவித்துள்ளார். எனவே அமைதியை சீர்குலைத்ததற்காக இமாம் அப்துல் ராஷிதிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. எதிர்கட்சியான பிஜேபி அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி வருகிறது.

ஒற்றை நீதிக் கமிஷன்  நீதிபதி எஸ்.கே.கார்க் தலைமையிலான குழு இரண்டு குழுக்களையும் சந்தித்து அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதியளித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza