Wednesday, August 24, 2011

ஹஸாரேவுக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு – மணிப்பூருக்கு வருகை தர கோரிக்கை

irom sharmila
குவஹாத்தி:சிறப்பு ஆயுத சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் இரோம் ஷர்மிளா அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மணிப்பூரின் இரும்பு பெண்மணியான ஷர்மிளா தனது ஆதரவை தெரியப்படுத்தியுள்ளார்.
அன்னா ஹஸாரேவின் குழுவினர் போராட்டத்திற்கு ஆதரவு தேடி நேற்று முன்தினம் ஷர்மிளாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஷர்மிளாவிடம் இடைவெளியை பேணி புறக்கணித்துவரும் ஊடகங்கள், ஹஸாரே மற்றும் அவரது குழுவினரை அருந்ததிராய், அருணாராய் போன்ற சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இச்சூழலில் ஷர்மிளா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். நிரபராதிகளான பத்து சிவிலியன்களை அநியாயமாக எக்காரணமுமின்றி ராணுவம் சுட்டுக்கொன்றதை பார்த்தை ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்க முடிவுச்செய்தார்.ஆனால் அதிகாரிகள் பல வேளைகளில் ஷர்மிளாவை கைதுச்செய்து பல பிரயோகத்துடன் உணவை செலுத்தினர்.

இம்பாலில் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷர்மிளாவுக்கு மூக்கில் இணைக்கப்பட்டுள்ள ட்யூப் மூலமாக திரவத்திலான உணவை அதிகாரிகள் நிர்பந்தித்து அளித்துவருகின்றனர்.

நீதிமன்ற காவலில் இருப்பதால் ஹஸாரேவின் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும், ஆனால் தனது ஆதரவை கடிதம் மூலம் ஷர்மிளா ஹஸாரேவுக்கு தெரிவித்துள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலரும், ஷர்மிளாவின் நெருங்கிய ஆதரவாளருமான பப்லு லோயிட்டன்பாம் தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவிடம் மணிப்பூருக்கு வருகை தரவும் ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza