ஸ்ரீநகர்:சுதந்திர தினத்தன்று கஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அளித்துள்ள முன்னெச்சரிக்கையை தொடர்ந்து ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், சுதந்திர தினத்தில் ஹுர்ரியத் மாநாட்டு கட்சி(மீர்வாய்ஸ் ஃபாரூக் பிரிவு) கஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் பக்ஷி ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், சி.சி.டி.வி அமைப்பு ஆகியன உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்ஷி ஸ்டேடியத்தில் செய்யப்பட்டுள்ளது.
கஷ்மீரில் நிலவும் சூழலை உலக மக்களின் கவனத்தில் கொண்டுவருவதுதான் முழுஅடைப்பின் நோக்கம் என மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்துள்ளார். கஷ்மீர் மக்கள் ராணுவ பந்தோபஸ்தில் வாழும் பொழுது இந்திய சுதந்திர தினம் கொண்டாடுவது சரியல்ல என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment