ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் தவ்ஸா மாவட்டத்தின் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஆறு மாதங்களிடையே 226 கர்ப்ப பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று தனியார் மருத்துவமனைகள் பெண்களை ஏமாற்றி 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பறித்துள்ளன. தகவல் அறியும் சட்டத்தின்படி அரசு சாரா அமைப்புக்கு இந்த அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.
கர்ப்ப பையை அகற்றாவிட்டால் கிருமி தொற்றிக்கொள்ளும் எனவும், உயிருக்கு ஆபத்து என நோயாளிகளை அச்சுறுத்தி கர்ப்ப பைகளை அகற்றியுள்ளனர். கடுமையான வயிற்று வேதனையால் அவதியுற்ற பெண்ணிற்கு கர்ப்ப பையை நீக்கம் செய்தபிறகும் வயிற்று வலி நீடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் இன்னொரு டாக்டரிடம் சென்று காண்பித்துள்ளார். அப்பொழுது அவர் கர்ப்ப பைக்கும், வயிற்று வேதனைக்கு எவ்வித தொடர்புமில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறுமாதங்களில் இந்த 3 மருத்துவமனைகளுக்கு சிகிட்சைக்காக சென்ற 385 பேரில் 226 பெண்களின் கர்ப்ப பைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களின் பிரசவத்திற்கான அனுமதிப் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகள்தாம் கர்ப்ப பைகளை கொள்ளையடித்துள்ளன. 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடையேயான பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி, எஸ்.டி வகுப்புகளைச் சார்ந்த பெண்கள்தாம் தனியார் மருத்துவமனைகளின் அநியாயத்திற்கு தங்களது கர்ப்ப பைகளை இழந்துள்ளனர்.
ஜோத்பூரில் கெட்டுப்போன குளுக்கோஸ் செலுத்தியதால் 17 கர்ப்பிணி பெண்கள் இறந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்ததையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment