Monday, January 24, 2011

தேவ்பந்த் மெளலானாவுக்கு என்ன நேர்ந்தது?

தேவ்பந்த் கல்வி கலாசாலையின் மீது நமக்கு எப்பொழுதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்திய சுதந்திர போராட்டத்தில் தேவ்பந்த் உலமாக்களின் பங்கு மகத்தானது. இந்தியாவில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு தேவ்பந்த் அளித்துவரும் சேவை உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையில் தேவ்பந்த் மதரஸாவிலிருந்து வெளியாகும் சில ஃபத்வாக்களும், மார்க்க அறிஞரின் கூற்றும் அடிக்கடி விவாதத்தைக் கிளப்புவதுண்டு. இம்ரானா விவகாரம், வந்தேமாதரம் சர்ச்சை, பெண்கள் வேலைக்கு செல்வது தொடர்பான ஃபத்வா என தேவ்பந்த் ஊடகங்களில் அடிக்கடி விவாதத்திற்குள்ளாகும்.

வந்தேமாதரம் விவகாரத்தில் தேவ்பந்த் மேற்கொண்ட துணிச்சலான நிலைப்பாடு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், சில வேளைகளில் தேவ்பந்த் உலமாக்களின் ஃபத்வாக்களும், அறிக்கைகளும் தற்கால சூழல், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சதித் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து புரிந்துக் கொள்ளாமலேயே வெளியிடப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.

பாசிசம் என்ற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கை அவ்வியக்கதுடன் மட்டும் ஒதுங்கிவிடவில்லை. அரசியல்,அதிகாரம், நீதிபீடங்கள், ஊடகங்கள் என ஊடுருவியுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் பாசிச மயமாகி நெடுங்காலமாகிவிட்டது.

இந்நிலையில் நாம் விடுக்கும் செய்திகளைக் குறித்த விழிப்புணர்வும், ஊடகங்களின் தகிடுதித்தங்கள் குறித்த எச்சரிக்கையும் தேவை என்பதை தேவ் பந்த் உலமாக்கள் உணரவேண்டும்.

சில தினங்களுக்கு முன்பாக தேவ்பந்த் மதரஸாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தில் பிறந்து மஹராஷ்ட்ரா மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்ட மெளலானா குலாம் முஹம்மது வஸ்தனவி கூறியதாக பத்திரிகைகளில் வெளியானச் செய்தி முஸ்லிம் சமுதாயத்தில் விவாதத்தை கிளப்பியிருந்தது.

அச்செய்தி இதுதான்: குஜராத்தில் மோடியின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும், அங்கு கலவரங்களைக் குறித்து மீண்டும் உயர்த்தி பிடிக்கும் நிலைப்பாடு சரியல்ல என்பதுதான் அது.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து மெளலானா இதற்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் முதல்வர் மோடியை நான் நியாப்படுத்தவோ, குற்றமற்றவர் எனவோ கூறவில்லை. குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் புரண்ட மோடிக்கு நானும், முஸ்லிம்களும் மட்டுமல்ல, இறைவன் கூட மன்னிப்பளிக்கமாட்டான். இறைவனிடம் மோடியை பழிவாங்க பிரார்த்தனைச் செய்வோம்.

குஜராத் கலவரத்தைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஏன் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனைக் குறித்து கேள்வி எழுப்புகின்றீர்கள்? எனவும், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அக்கலவரம் மிகக் கொடூரமாக இருந்தது எனவும்தான் பதிலளித்தேன். இதன் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் எவரையேனும் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதன் பெயரில் என்னைத் தேர்ந்தெடுத்த தேவ்பந்த் ஷூரா கவுன்சில்(ஆலோசனை கமிட்டி) விரும்பினால் ராஜினாமாச் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் அளித்த பதிலை ஆங்கில பத்திரிகை திரித்து வெளியிட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்த ஒலிநாடா என்னிடம் உள்ளது.

கல்வி மற்றும் வர்த்தகத்துறையில் சக்தி பெறுவதற்கு குஜராத் முஸ்லிம்கள் நடத்தும் முயற்சிகளுக்கு திருப்தியை தெரிவித்திருந்தேன்.

மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளின் காரணமாக குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டது உண்மையாகும். அதன் பலனை முஸ்லிம்களும் அனுபவிக்கிறார்கள். இதனைத் தவிர மோடியை இதன்பெயரில் நான் புகழவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

சரி மெளலானா கூறியதுக் குறித்து பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்த அறிக்கையில் கூறியிருக்கும் செய்தி என்ன? நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்தான் கொல்லப்பட்டார்களாம். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனை பற்றி ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? என பத்திரிகையாளர்களிடம் வினவுகிறார்.

பத்திரிகையாளர்கள் குஜராத் கலவரத்தைக் குறித்து கேட்டதில் என்ன தவறு? குஜராத்தைச் சார்ந்த மெளலானா இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கலாசாலையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் இத்தகைய கேள்வி எழுந்திருக்கலாம்? பத்திரிகையாளர்கள் என்ன நோக்கத்தில் கேட்டார்களோ? என்பது வேறு விஷயம். கேள்வி கேட்கக்கூடாது என்றால் குஜராத் இனப் படுகொலையை மறக்கச் சொல்கிறாரா? மெளலானா.

இறைவனிடம் மோடியை பழிவாங்கு என பிரார்த்தித்துவிட்டு சும்மா உட்கார்ந்து விடுவோம் என கூறவருகிறாரா? மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களால் முஸ்லிம்கள் என்ன பயனை அடைந்துவிட்டார்கள்? அகதிகள் முகாமில் தங்கியிருப்போர் எத்தனை?முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எல்லாம் முழுமையடைந்து விட்டதா? இனப் படுகொலைகளின் போது ஊரைவிட்டு வெளியேறிய முஸ்லிம்களெல்லாம் மீண்டும் தங்கள் வசிப்பிடம் செல்ல முடிகிறதா? கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைத்துவிட்டதா? முஸ்லிம்களை விட்டுவிட்டால் கூட அம்மாநிலத்தில் வாழும் ஏழை எளியோரின் நிலைமை என்ன? குஜராத்தின் வளர்ச்சிக் குறித்த உண்மைகள் என்ன? இவற்றிற்கெல்லாம் பதிலளிக்க மெளலானா தயாராகுவாரா?

பாப்ரி மஸ்ஜிதும், குஜராத்தும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் என்றும் ரிங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு உரிய தீர்வு கிடைக்குவரை. மோடியின் தலைமையின் கீழ் நடந்த முஸ்லிம் இனப் படுகொலையை வளர்ச்சியின் பெயரால் மறந்துவிட எந்த முஸ்லிமும் தயாராகமாட்டான்.

குஜராத் இனப் படுகொலையை மறப்பது உயிரையும், மானத்தையும் இழந்துபோன அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு செய்யும் கடுமையான துரோகமாகும்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza