Monday, December 27, 2010

பெரியபட்டிணம் அருகே படகு விபத்தில் 15 பேர் பலி

பெரியபட்டிணம்,டிச.27:ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டிணம் அருகே நடுக்கடலில் நேற்று படகு கவிழ்ந்ததில், சுற்றுலா சென்ற 15 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பெரியபட்டிணத்தை சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இவர், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். உறவினரின் திருமண நிகழ்ச்சி மற்றும் டிசம்பர் மாத விடுமுறையை கழிக்க, அப்துல் குத்தூஸ் குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று காலை அவரும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் அய்யூப்கான், ரசூல் ஆகியோருக்கு சொந்தமான இன்ஜின் பொருத்தப்பட்ட 2 படகுகளில் பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள முள்ளித்தீவுக்கு சுற்றுலா சென்றனர்.

ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன் ஆண்கள் சென்றனர். அய்யூப்கான் கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என, 30௦ பேர் சென்றுள்ளனர்.

தீவுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்ற போது, படகு லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். மேலும் அப்போது ஏற்பட்ட பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்' செய்ய தவறியதாலும் கவிழ்ந்தது.

அந்த படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர். இதைப் பார்த்த மற்றொரு படகில் இருந்தவர்கள், அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். மேலும் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடற்கரையில் இருந்த மீனவர்கள் 3 படகுகளில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் 13 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மற்றொரு படகில் சென்றவர்கள் மற்றும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இருவரின் உடல் இன்று காலை மீட்க்கப்பட்டது.

பலியானவர்களில் 6 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் 7 குழந்தைகள் அடங்குவர்.

முதலில் மீட்கப்பட்ட 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இருவரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

சுனாமி நினைவு தினமான நேற்று இந்த சம்பவம் நடந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza