Sunday, November 14, 2010

சுதர்சனின் அறிக்கை:இந்தியா முழுவதும் காங்கிரஸ் நடத்திய கண்டனப் போராட்டம்

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை மோசமாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சனை கண்டித்து இந்தியா முழுவதும் கண்டனப் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தியது.

டெல்லியில் ஜந்தேவாலேயில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் கண்டனப் பேரணியை நடத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர்.

மேற்குவங்காளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலும், பாட்னாவிலும் போராட்டம் நடத்திய காங்கிரஸார் சுதர்சனின் உருவப் பொம்மையை எரித்தனர்.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் சாலை மறியலில் காங்கிரஸார் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கே.வி.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸார் கைதுச் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஹைதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சுதர்சனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.

புதுவை, பஞ்சாப், உத்தராகண்ட், ஒரிஸ்ஸா, மஹாராஷ்ட்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்முகஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களிலும் காங்கிரஸார் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

இதற்கிடையே முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அவமதிப்பான விமர்சனங்களுக்காக மன்னிப்புக் கோருவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் துணைப் பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியிருப்பதாவது: 'அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் இந்த விமர்சனம் குறித்து நான் மிகவும் வருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இச்சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதே அபிப்ராயம்தான் தங்களுடையது என பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.

சுதர்சனின் விவாத விமர்சனத்திற்காக பா.ஜ.கவும் மன்னிப்புக் கோரவேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய கோருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திக் விஜய்சிங், 'ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு 125க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் உள்ளன. அதில் ஒரு அமைப்பை மட்டும் தடைச்செய்து பயனில்லை என அவர் தெரிவித்தார்.

சோனியா காந்தி சி.ஐ.ஏவின் ஏஜண்டு எனவும், முன்னாள் பிரதமரும் சோனியாவின் கணவருமான ராஜீவ் காந்தி மற்றும் அவருடைய மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தியின் கொலைக் குற்றங்களில் சோனியா ரகசிய ஆலோசனை நடத்தினார் என சுதர்சன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே வேளையில், சுதர்சனுக்கு எதிராக ஜெய்பூர் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது. ஜெய்பூர் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. சுதர்சனுக்கெதிராக போபாலில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அவமதிப்பு வழக்க்கு பதிவுச்செய்துள்ளார்.


செய்தி - பாலைவனத்தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza