Monday, November 22, 2010

பீகாரில் குண்டுவெடிப்பு -7 பேர் பலி - பாதுகாப்புப் படையின் பொறுப்பற்ற செயல்

பாட்னா,நவ.22:பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மறு நாளே பலத்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

பீகாரின், ஒளரங்காபாத் மாவட்டம், பச்சோக்கர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாவோயிஸ்ட்கள் வைத்த வெடிகுண்டை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் அதனை செயலிழக்கச் செய்யாமல் தாமதித்ததே உயிர் பலிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த குண்டை நேற்று மாலையே பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டிருந்தனர். நேற்று நடந்த இறுதி வாக்குப்பதிவின்போது நாசத்தை ஏற்படுத்த இந்தக் குண்டை மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். இதை போலீஸார் கண்டுபிடித்து மீட்டுவிட்டனர். ஆனால் இதை செயலிழக்க வைக்காமல் அப்படியே அங்கிருந்த வயலில் போட்டு வைத்திருந்தனர்.

இன்று காலை அதை செயலிழக்க வைக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்று காலை வயலுக்குச் சென்ற விவசாயிகள் குண்டு கிடந்தைப் பார்த்து அருகில் போனபோது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து கூடுதல் டிஜிபி பி.கே.தாக்கூர் கூறுகையில், சம்பவ இடத்தில் குண்டு இருப்பது குறித்து கிராம மக்களை நாங்கள் உஷார்படுத்தியிருந்தோம். ஆனால் அங்கு இன்று காலை சில குழந்தைகள் சென்று குண்டை எடுத்து விளையாடியுள்ளனர். இதனால்தான் அது வெடித்து விட்டது என்றார்.

ஒரு வெடிகுண்டை கண்டுபிடித்தவுடன் அதை செயலிழக்க வைப்பதுதான் பாதுகாப்புப் படையினரின் முதல் வேலையாக இருக்கும். ஆனால் குண்டைக் கண்டுபிடித்து அதை சாவகாசமாக வயலில் போட்டு வைத்து விட்டுச் சென்ற பாதுகாப்புப் படையினரின் செயல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

NEWS - PAALAIVANATHOOTHU

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza